சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை, ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாலையும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மற்றும் சாலையில் தண்ணீர் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வேலை முடித்து வீட்டிற்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டு உள்ளனர். கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை மாலையில் முன்னதாகவே வீட்டிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இலங்கையையொட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் உள்பட கடலோர மாவட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளநிலையில் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார் ஆட்சியர் சுந்தரவல்லி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறையை அறிவித்து உள்ளார்.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னையில் கனமழை காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கனமழையால் விரைவு ரயில்கள் வழக்கமான வேகத்தைவிட குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-dailythanthi.com

TAGS: