கேரள அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் டாக்டர் ராமதாஸ் யோசனை

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு திகழ்கிறது. ஒகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும்போது அப்படித் தான் நினைக்கத் தோன்றுகிறது.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறியுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது மீனவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க உண்மை என்பதை உணர முடிகிறது. ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?. உயிரிழந்த மீனவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களைக் கூட தமிழக அரசு வெளியிட மறுக்கிறது.

கேரளத்தில் ஒகி புயலில் சிக்கி 30 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவியை ரூ.10 லட்சத்தில் இருந்து, ரூ.20 லட்சமாக கேரள அரசு உயர்த்தியுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சேதமடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகு என ஏராளமான சலுகைகளை கேரள அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் இதுவரை 36 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறி ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒகி புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது? என்பதை கேரள அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மீட்புப் பணிகளை விரைவு படுத்தி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளத்துக்கு இணையாக இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-dailythanthi.com

TAGS: