3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் முத்தலாக் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி,

இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, வருகிற குளிர்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’குக்கு தடை விதிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடிவுசெய்த மத்திய அரசு, முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட வரைவு மசோதாவை தயார் செய்தது. வாய்மொழியாக, எழுத்துப்பூர்வமாக, இ-மெயில் உள்பட தகவல்தொடர்பு உபகரணங்கள் மூலம் உடனடியாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயாரிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் தனது மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்காக நீதிமன்றத்தை நாடவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து தங்கள் கருத்தை தெரிவிப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் ஒப்புதல் அளித்தது. இப்போது மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மசோதா பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகிறது.

-dailythanthi.com

TAGS: