ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்- இயக்குநர் கௌதமன் சவால்

சென்னை : ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இயக்குநர் கௌதமன் சவால் விடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் நேற்று அறிவித்தார். அப்போது அவர் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் கௌதமன் கூறுகையில், நினைத்து பாரக்க முடியாத துயரமான மனோநிலையில்தான் இந்த ஆண்டு தொடங்குகிறது. 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இநத தமிழினம் இன்று சொல்ல முடியாத அளவுக்கு உரிமையை இழந்துள்ளது.

விடியலுக்கு வெளிச்சம்

நீர், நிலம், ஆறு, வளம் ஆகிய மட்டுமல்லாமல் உயிரையும் உரிமையும் இழந்து வரும் நிலையில் மீனவர்கள், விவசாயிகள், மாணவர்களின் உரிமையை காப்பாற்ற எங்கேயாவது இருந்து ஒரு உண்மையான, தெளிவான பெரும் வெளிச்சம் தமிழ் இனத்தின் விடியலுக்கு ஏதாவது கிடைத்துவிடாதா என்று தேடி வருகிறோம்.

உரிமைகள் பறிப்பு

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு துக்க செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார். தமிழர்களின் உயிர், உரிமைகள் பறிக்கப்படும் போது என்றாவது களத்தில் நின்று போராடியிருக்கிறாரா. இந்த நிலையில் ஆன்மீக அரசியலை அவர் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்

ரஜினிகாந்த் பாஜகவின் பின்புலத்தில்தான் இயங்குகிறார். எங்களை நினைக்கும் கூட்டத்தின் கையாளாக இந்த மண்ணுக்குள் அவர் வருகிறார். அதிகார வர்க்கமே கைவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டுக்காக அவணியாபுரம் சென்று ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி ஒட்டுமொத்த தமிழினமும் எழுந்தது.

போருக்கு நாங்களும் தயார்

விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட நிகழ்வுக்காகவே கத்திபாராவை இழுத்து பூட்டினோம். எங்கள் மண்ணை ஆக்கிரமிக்க, அழித்தொழிக்க, அபகரிக்க யார் வந்தாலும் நாங்கள் எதிராக நிற்போம். நீங்கள் போருனு சொல்லிட்டீங்க, நாங்களும் தயார்.

அடித்து விரட்டியவர் பால்தாக்கரே

மகராஷ்டிராவின் பால் தாக்கரேவை என்னுடைய தந்தையாகவும் கடவுளாகவும் பார்க்கிறேன் என்று ரஜினிகாந்த் ஒரு முறை கூறியுள்ளார். பால்தாக்கரே என்பவர் அந்த மாநிலத்திலிருந்து இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் ஓட ஓட அடித்து விரட்டியவர். மகாராஷ்டிர மக்களை தவிர வேறு யாரும் இந்த மண்ணில் இருக்கக் கூடாது என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தி தமிழர்களையும் அடித்து துரத்தினார்.

ரஜினியை எதிர்த்து நான் நிற்பேன்

தமிழர்களை அடித்து துரத்தியவர் உங்களுக்கு கடவுள், தந்தை என்றால், அவரது பாசமிகு பிள்ளையாக எங்கள் தமிழ் மண்ணை ஆளும் தகுதி ரஜினிகாந்துக்கு உள்ளது என்பதே என் கேள்வி. வள்ளலாரின் ஆன்மிகத்தை தாண்டி எங்களுக்கு தெரியாத பாபாவின் ஆன்மிகம் எங்களுக்கு தேவையில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது ஆபத்தானது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றார் கௌதமன்.

tamil.oneindia.com

TAGS: