தமிழகமே தமிழகமே.. “மாய வலை”யிலிருந்து உனக்கு எப்போது விடுதலை?

சென்னை: கண்ணுக்கு எட்டியவரை பச்சை பசேல் என வயல்கள் என்று முன்பு கூறுவோம்.. ஆனால் இன்று வயல்களை அழித்து விட்டோம். கண்ணுக்கு எட்டியவரை கான்க்ரீட் காடுகள்தான் காட்சி தருகின்றன. அடுத்து சினிமாக்காரர்களின் படையெடுப்பு.

ஆனால் இந்த சினிமாக்காரர்களின் படையெடுப்பு தமிழ்நாட்டுக்குப் புதிதில்லைதான். ஆண்டாண்டு காலமாக இந்த சினிமாவுக்குத்தானே அடிமைப்பட்டுக் கிடக்கிறது தமிழகம். மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்க விரும்பாவிட்டாலும் கூட வலியக்க திணித்து விடுகிறது சூழல்கள். தெரிந்தோ தெரியாமலோ இந்த சினிமா, ‘சுழல்’ போல மக்களை உள்ளிழுத்து கபளீகரம் செய்து கொண்டுதான் உள்ளது.

அரசியலையும், இந்த சினிமாவையும் பிரிக்க முடியவில்லை. இதிலிருந்து மக்களால் விடுபடவும் முடியவில்லை. தலையில் எழுதியிருப்பது என்று ‘ஜஸ்ட் லைக் தட்’ சொல்லி விட்டுப் போக முடியாது என்றாலும் கூட இதிலிருந்து எப்போது விமோச்சனம் என்றுதான் நமக்குப் புரியவில்லை.

மாற்று என்றால் என்னங்கய்யா?

மாற்று அரசியல் எப்போது நமக்கு வரும், மாற்று என்பது எப்போது கிடைக்கும் என்பதே தமிழக மக்களுக்குப் புரியாமல் உள்ளது. எது மாற்று என்பதிலும் மக்களுக்குப் பெரும் குழப்பம்.

அந்தக் கொள்ளியா இந்தக் கொள்ளியா?

எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற நிலையில்தான் மக்கள் தொடர்ந்து “வாழ வைக்கப்பட்டுள்ளனர்”. அதிமுக அல்லது திமுக என்பது கடந்த 50 ஆண்டுகளாக மக்களுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் “டெம்ப்ளேட்” ஆக மாறிப் போயுள்ளது.

அடுத்து வரப் போகும் 2 கட்சி எது?

இந்த வரிசையை எந்த வகையிலும் சீர்குலைந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் அரசியல்வாதிகள் படு கவனமாக உள்ளனர். ஒருவேளை அதிமுக, திமுக என்பது சாத்தியமாகவிட்டால், அடுத்து ரஜினி -கமல் என்ற புதிய டெம்ப்ளேட்டை தூசி தட்டி எடுத்து வைத்து விட்டனர்.

இதுக்குப் பெயர்தான் மாற்றாப்பா!?

ரஜினி – கமல் என்ற இரு முனைகளைச் சுற்றித்தான் இனி எதிர்கால தமிழக அரசியல் இருக்குமா என்ற அச்சமும், குழப்பமும் மக்கள் மனதில் சுற்ற ஆரம்பித்துள்ளது. நாம் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா அல்லது இதுதான் உங்களுக்கான மாற்றம் என்று கொண்டு வந்து திணிக்கிறார்களா என்ற குழப்பமும் மக்களிடம் நிலவுகிறது.

எல்லா ஆப்ஷனும் சினிமாதான்

ஆப்ஷன் ஏ, ஆப்ஷன் பி என்று சொல்வார்கள். தமிழக மக்களுக்கு இப்போது முன் நிறுத்தப்பட்டுள்ள எல்லா ஆப்ஷனுமே சினிமாக்காரர்கள்தான். அந்தப் பக்கம் ரஜினி, இந்தப் பக்கம் கமல், நடுவே விஷால்.. இடை இடையே ராகவா லாரன்ஸ் போன்றோர்.. இதுதான் எதிர்கால தமிழக மாற்று அரசியலாக நம் முன் நிறுத்தப்படுகிறது. இதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என்று மறைமுகமாக “கட்டாயப்படுத்தப்படும்” நிலையை உருவாக்கி வருகிறார்கள்.

சினிமா மாயை

மீண்டும் ஒரு சினிமா மாய வலையில் போய் தமிழகம் சிக்கப் போகும் சூழலே இப்போது பிரகாசமாக உள்ளது. ரஜினி, கமல் என்று வந்தால் அவர்களைப் பின்பற்றி பெருமளவில் சினிமாக்காரர்கள் வரிசை கட்டி வருவார்கள். மீண்டும் ஒரு சினிமா மையத்தைப் பின்பற்றி தமிழக அரசியலின் அச்சு சுழலும் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் ஒரு மாய வலை தமிழக மக்களுக்காக கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கிறது.

என்ன செய்யப் போகிறோம்?

ரஜினி கமல் இருவரும் அரசியலுக்கு வரவுள்ளது நிச்சயம் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தும். பல கட்சிகள் உடையும், பலர் தாவி வருவார்கள். மொத்தத்தில் இருக்கிற கட்சிகள் சிதையும், புதிய கட்சிகளுக்குப் பலன் கிடைக்கும்.. ஆனால் மக்களுக்கு என்ன கிடைக்கும்??? எப்படிப் பார்த்தாலும் இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த மாய வலையிலிருந்து தமிழக மக்கள் விடுபட்டு வருவது மிகப் பெரிய கஷ்டம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

tamil.oneindia.com

TAGS: