தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. லிங்காயத்துகளை போல சைவர்களாக அறிவிக்க போராடுவோம்: சீமான்

சென்னை: தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. கர்நாடகா லிங்காயத்துகளைப் போல சைவர்களாக அறிவிக்க போராடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கடவுள்-2 படத் தொடக்க விழாவில் சீமான் பேசியதாவது:

இந்து என்ற சொல் எப்படி வருகிறது? மதம் பரப்ப வந்த கால்டுவெல் போப் மக்கள் கூட்டத்தைக் கணக்கிடுகிறார். ஆரியர் என ஒரு பகுதியினரைக் குறிப்பிட்டார்.

இந்துக்களாக பதிவு

மற்றொரு பகுதியினரை தென் மாநில மக்களை ஆரியத்துக்கு எதிராக திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இந்தியா என்பது ஒரு நாடாக இருந்தது இல்லை.

சிந்து என்பதே இந்து

சமஸ்தானங்களாகவும் பாளையங்களாகவும் இந்த நிலப்பரப்பு இருந்தது. ஆங்கிலேயர்கள்தான் ஒரே நாடாக மாற்றுகின்றனர். அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தை குறிப்பிடும் போது சி உச்சரிப்பு வராமல் இ என்பதைப் பயன்படுத்தி இந்தியா என குறிப்பிட்டனர்.

சைவர்கள் இந்துக்கள் அல்ல

இந்த மக்கள் கூட்டத்தை கணக்கிடும் போது எவன் பார்சி இல்லையோ; எவன் கிறிஸ்தவன் இல்லையோ… எவன் இஸ்லாமியன் இல்லையோ அவர்கள் அத்தனை பேரையும் வெள்ளைக்கார ராணி இந்து என சட்டம் இயற்றுகிறார். அதனால் சைவர்கள் நாங்கள் இந்துக்களாகிவிட்டோம்.

காஞ்சி சங்கராச்சாரியார்

சமணர்கள் இந்துவாகிவிட்டனர். வைணவர்கள் இந்துவாகிவிட்டனர். பவுத்தர்கள் இந்துவாகிவிட்டனர். சீக்கியர் தனி மதம்.. அவர்களையும் இந்துக்களாக்கிவிட்டனர். தமிழ்நாட்டில் இருப்பது எல்லாம் சைவ மடங்கள். ஆனால் சட்டப்படி இந்து மடங்கள். மறைந்த காஞ்சி பெரியவர் தெய்வத்தின் குரலில் ஆங்கிலேயர் நமக்கு இந்து என பொதுப்பெயர் வைத்ததால் தப்பித்தோம் என எழுதியிருக்கிறார்.

லிங்காயத்துகளை போல

நாங்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தமிழர்கள். எங்களுக்கு தனிவழிபாடு, தனிமரபு இருக்கிறது. கர்நாடகாவில் லிங்காயத்துகள் கிளம்பிவிட்டார்கள். என்னை இந்து மதத்தில் சேர்க்காதே என்கின்றனர் லிங்காயத்துகள். அதேபோல் நாங்களும் எங்களை இந்துக்களில் சேர்க்காதீர்கள்; சைவர்கள் என பிரிந்து செல்வோம். சைவமாக இருக்கும் போது நாங்கள் தலைவராக இருக்க முடியும். ஆனால் இந்துவாக இருந்தால் நாங்கள் தலைவர்களாக முடியாது.

tamil.oneindia.com

TAGS: