காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹல்மத்போரா காட்டுப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வந்தது.

அந்தப் பகுதியில் நேற்று தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை போலீசாரும், ராணுவத்தினரும் நடத்தினர். எல்லைத் தாண்டி வந்த பயங்கரவாதிகள் என தெரிவிக்கப்படுகிறது. 4 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் 2 பயங்கரவாதிகள் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இன்றும் பாதுகாப்பு படை மேற்கொண்ட போதும் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இதில் 4 போலீசாரும், 2 ராணுவ வீரர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 போலீசார், 2 ராணுவ வீரர்கள் என 4 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.

-dailythanthi.com

TAGS: