காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் பலி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள ரெட்வானி ஏரியாவில் ராணுவத்தினரின் ரோந்து வாகனத்தின் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 22 வயது ஷகீர் அகமது, 20 வயதாகும் இர்ஷாத் மஜீத், மற்றும் 16 வயது சிறுமி அண்ட்லீப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே குல்காம் பகுதியின் ஹவூரா பகுதியை சேர்ந்தவர்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 10 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனந்த்நாக், குல்காம், புல்வாமா ஆகிய பகுதிகளில் செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் காரணமாக கலவரம் மேலும் பரவக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக மொபைல் போன் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் வோரா, உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். காவல்துறை மற்றும் ராணுவத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

ஆளுநர் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூத்த ராணுவ அதிகாரிகள் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர். கஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பெண்கள் பிரிவினைவாத அமைப்பான துக்தரன்-இ-மிலாத் என்ற அமைப்பைச் சேர்ந்த அமைப்பின் தலைவி ஆசியா அந்த்ரபி தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதை எதிர்த்து காஷ்மீரில் பந்த் போராட்டம் நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் ராணுவத்தினர் மற்றும் பிரிவினைவாதிகள் நடுவே மோதல் நடைபெற்றுள்ளது.

2016ம் ஆண்டு என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்கான் வானி நினைவு தினம் அனுசரிக்க இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-tamil.oneindia.com

TAGS: