எய்ட்ஸ் முதல் கேன்சர் வரை.. அனைத்திற்கும் தீர்வு சொல்லும் ஹீலர் பாஸ்கர்.. யார் இவர்?

சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஒரு மோசடி பேர்வழி என்றும், அவர் சிறந்த மருத்துவ ஆசான் என்றும் இரண்டு விதமாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த கோர சம்பவத்தின் சுவடுகள் அடங்கும் முன்பே, ஹீலர் பாஸ்கர் இயற்கை முறையில் வீட்டில் எப்படி சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பதாக விளம்பரம் கொடுத்தார்.

கொதித்து எழுந்த தமிழக காவல் துறை அவரை கைது செய்தது. நீண்ட நாட்களாக சமூக வலைத்தளங்களில் இவர்தான் ஹாட் டாப்பிக். இவரது வரலாறும், பேச்சுக்களும் மிகவும் வித்தியாசமானது.

கோவை

கோயம்புத்தூரில் பிறந்த பாஸ்கர், எல்லோரையும் போலத்தான் வளர்ந்து இருக்கிறார். ஒரு கோயம்புத்தூர் மிடில் கிளாஸ் நபரின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்குமோ அது எல்லாம் இவரின் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. இன்ஜினியரிங் படித்த இவர் அது சம்பந்தமான வேலைகளை தேடி இருக்கிறார். எல்லோரையும் போல இவருக்கும் இன்ஜினியரிங்கில் வேலை கிடைக்காததால் மருத்துவராக மாறியுள்ளார்.

இருக்கு ஆனா இல்லை

இவர் மருத்துவராக மாறியதற்கு நிறைய வீடியோக்களில் காரணமும் சொல்லியுள்ளார். சிறுவயதில் இருந்து தனக்கு நிறைய உடல் பிரச்சனை இருந்ததாகவும், அதனால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஒருமுறை சாகும் நிலைக்கு சென்றதாகவும் கூட சொல்லி இருக்கிறார். ஆனால் இவர் சொல்லும் அந்த கொடூரமான நோய் எல்லாம் சளி, தும்மல், இருமல் மட்டுமே. இதனால் மக்களுக்கு நோய் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்ததாக கூறியுள்ளார்.

மனநோய் இருந்தது

தனக்கு மனநோய் இருந்ததாக இவரே கூட சொல்லி இருக்கிறார். ஆம் இவருக்கு படித்து முடித்த பின் மனநல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பின் அதில் இருந்து கொஞ்சம் மீண்டவர், இவரே தன்னுடைய ரத்தத்தை பரிசோதனை செய்து, தனது உடலில் மோசமான மூலக்கூறுகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார். ஆனால் இதை எப்படி செய்தேன் என்றெல்லாம் மனிதர் விளக்கவில்லை.

ஆராய்ச்சி செய்தாராம்

கல்லூரி முடித்ததில் இருந்து மனித உடல்கள் குறித்து இவர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார். ஆனால், எங்கு எப்போது யார் அனுமதியுடன், யார் உடலில் ஆராய்ச்சி செய்தார் என்று எந்த விபரமும் இவர் இதுவரை வெளியிட்டது இல்லை. அதேபோல் சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட பலநாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டதே இல்லை.

சொந்த அறக்கட்டளை

இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் (??) இவர் அனாடமிக் தெரப்பி என்ற சிகிச்சை முறையை உருவாக்கி இருக்கிறார். அதோடு அனாடமிக் தெரபி ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையையும் உருவாக்கி உள்ளார். இதன்முலம் மக்களுக்கு வித்தியாசமான மருத்துவ முறையை கற்றுத்தருவதாக கூறுகிறார். ஆனால் இதுதான் இப்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.

யூ -டியூப் புயல்

இல்லுமினாட்டி புகழ் பாரிசாலன். இவர் உட்பட சிலர் யூ -டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அலோபதி மருத்துமுறைக்கு எதிராக பேசி வருகிறார்கள். அதில் இயற்கை முறை வீட்டு பிரசவமும் அடக்கம். அப்படி போன்ற வீடியோக்களை பார்த்து மனம் மாறித்தான் திருப்பூரில் அந்த கோர சம்பவம் அரங்கேறியது. போலியோ ஒழிக்கப்பட்ட நாட்டில் மீண்டும் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இவரது வீடியோக்கள் லட்சம் பார்வையாளர்களை கொண்டு இப்போதும் வைரலாக உள்ளது.

செவிவழி தொடு சிகிச்சை என்றால் என்ன

செவிவழி தொடு சிகிச்சை என்ற முறையை ஹீலர் பாஸ்கர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது இவரது நிகழ்ச்சிக்கு சென்று, இவரது பேச்சை கேட்டாலே உடல் பிரச்சனை எல்லாம் சரியாகும் என்றுள்ளார். அதாவது எந்த நோயாக இருந்தாலும் இவர் யூ டியூப்பில் பேசுவதை கேட்டால் காணாமல் போய் விடும் என்று கூறியுள்ளார். அதை பின்பற்றவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே இதில் கொடுமையான விஷயம்.

சிகிச்சை முறைகள்

அதேபோல் இவர் இன்னும் நிறைய வித்தியாசமான சிகிச்சை முறைகளை உருவாக்கி இருக்கிறார். ஆல்டர்நேட்டிவ் தெரபி, பாரம்பரிய அக்குபஞ்சர் தெரபி, மரபு வழி சிகிச்சை என்று சில சிகிச்சை முறைகளை உருவாக்கி இருக்கிறார். இதுகுறித்து முறையான அனுமதி இன்றி கட்டணம் வாங்கி பயிற்சியும் அளித்து வருகிறார் ஹீலர் பாஸ்கர்.

குண்டு

தன்னிடம் எய்ட்ஸ், எபோலா, கேன்சர் ஆகிய நோய்களுக்கு மருந்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை எய்ட்ஸ், எபோலா, கேன்சர் நோயாளிகள் யாரையும் இவர் குணமாக்கியதாக வரலாறு இல்லை. அதேபோல் மனிதர்கள் வாயை திறக்காமல் சாப்பிட வேண்டும் (அது எப்படி?), உட்கார்ந்து கொண்டே தூங்க வேண்டும் என்று ஆரோக்கியத்திற்கு நிறைய வழிமுறைகளை சொல்லி இருக்கிறார்.

மோசடி நபரா

இவரை ஒரு மோசடி பேர்வழி என்று சமூக வலைத்தளங்களில் படித்த வர்க்கத்தினர் தெரிவித்து வருகிறார்கள். நோயால் அவதிப்பட்டு எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நபர்கள் இவரை கண்மூடித்தனமாக நம்பி வருகிறார்கள். ஆனால் என்ன நடந்தாலும் இன்னொரு கிருத்திகா தமிழ்நாட்டில் உருவாகி விட கூடாது என்பதே எல்லோருடைய விருப்பமும்.

tamil.oneindia.com

TAGS: