அரசு பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும் அன்புமணி ராமதாஸ்

சென்னை, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி மற்றும் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மாணவர்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளிலேயே கல்வி வழங்குவது தான் அரசின் கடமை எனும் நிலையில், அக்கடமையை செய்யாமல், பள்ளிகளை இழுத்து மூட தமிழக ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு 1,053 பள்ளிகளும் பிற பள்ளிகளுடன் இணைக்கப்படவுள்ளன. அதேபோல், நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 1,950 பள்ளிகளையும் நடத்த முடியாத நிலை விரைவில் ஏற்படும். அதனால் அந்த பள்ளிகளும் மூடப்படுவது உறுதியாகி விட்டதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர். கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதாக தொடர்ந்து பெருமை பேசி வரும் அ.தி.மு.க. அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிக் கூடங்களை மூடுவது மிகப்பெரிய அவமானமாகும்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தி அவற்றை தொடர்ந்து நடத்த அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-dailythanthi.com

TAGS: