காண்டாமிருகங்களை வேட்டையாடிய 2 பேரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளிய போலீசார்..

திஷ்பூர் : இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் ஒராங் தேசிய பூங்காவில் வசித்து வருகின்றன.

கெரட்டின் என்னும் பொருள் நிறைந்துள்ள காண்டாமிருக கொம்புகளுக்கு கள்ளச்சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி. இவை மருந்து தயாரிக்கவும், குத்துவாள், கத்தி உள்ளிட்டவைகளை அலங்காரப் பொருள்களாக உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் சமூக விரோதிகளால் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு அவற்றின் கொம்புகள் முறைகேடான வழியில் விற்கப்படுகின்றன.

இந்நிலையில், வேட்டைக்காரர்களை துடைத்தெறியும் நோக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் அசாம் மாநில போலீசார் இணைத்து கூட்டாக ஒராங் தேசிய பூங்கா வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் போலீசார் கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பதிலடியாக அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் சத்தம் வராமக் சுடுவதற்கு பயன்படும் துப்பாக்கி சைலன்சர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.

இந்தியாவில் உள்ள காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் சுமார் 27% உயர்ந்திருந்தாலும், அவை இன்னமும் ஆபத்தான சூழலிலேயே இருக்கின்றன. தொடரும் மிருக வேட்டை, நகரமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றால், காண்டாமிருகங்கள் அழியும் விளிம்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: