குஜராத் கலவர பின்னணியில் காங்., இருப்பது அம்பலம்

புதுடில்லி: குஜராத்தில் இருந்து பீஹார், உ.பி., மற்றும் ம.பி., தொழிலாளர்கள் விரட்டி அடிக்கப்படுவதன் பின்னணியில் காங்கிரஸ் இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது.

தொழிலாளர்கள் விரட்டியடிப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் குடும்பங்களுடன் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர். கடந்த செப்., 28 ம் தேதி குஜராத்தில் ஹிமத்நகர் என்ற இடத்தில், 14 வயது சிறுமியை பீஹார் ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பவத்திற்கு பிறகு, வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக பல ஆயிரம் பேர் குஜராத்தை விட்டு பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களுக்கு ஓட துவங்கியுள்ளனர்.

காங்., பின்னணி அம்பலம்

இந்த தாக்குதல் தொடர்பாக, 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஷத்ரிய தாகூர் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர்; காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கிறார்.

இச்சூழ்நிலையில், கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக தனியார் ‘டிவி’ சேனல் நடத்திய, ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் தெரிய வந்த தகவல்:

ஷத்ரிய தாகூர் சேனா அமைப்பின் காந்திநகர் மாவட்ட தலைவர் கோவிந்த் தாகூருடன், போனில் பேசியது ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிந்த் தாகூர் கூறுகையில், ” கலவரம் தொடர்பாக, எம்.பி.தாகூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காங்., கட்சி உறுப்பினர் எனினும் ஷத்ரிய தாகூர் சேனா சார்பில் கூட்டம் நடக்கும் போதும் அதில் கலந்து கொள்வார். அவர், தான் சார்ந்த கிராமத்தின் சேனா உறுப்பினர். அத்துடன் காங்., கட்சியிலும் இருக்கிறார். இதுபோல் பலர் உள்ளனர்,” என்றார்.

இதை ஷத்ரிய தாகூர் சேனா தலைவர் அல்பேஷ் தாகூரின் உதவியாளர் ஜெகத் தாகூரும் உறுதி செய்துள்ளார். காங்., தலைவர் எம்.வி.தாகூர் என்பவர், பிற மாநில தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும் என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ இந்த மாத துவக்கத்தில் வெளியானது.

-dinamalar.com

TAGS: