சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலை: சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் சத்தியாகிரகம் மற்றும் பா.ஜ.,வின் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கண்டு கொள்ளாமல் பினராயி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எல்லா வயது பெண் களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சபரிமலையில் போராட்டம் வெடித்தது. இதனால் மண்டல கால தொடக்கம் முதல் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் அமல் படுத்திய பல கடுமையான கட்டுப்பாடுகள் உயர் நீதிமன்ற தலையீட்டால் வாபஸ் பெறப்பட்டது. என்றாலும் பக்தர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் இருந்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக சபரிமலையில் எந்த போராட்டமும் நடைபெறவில்லை. பக்தர்கள் அமைதியாக வந்து செல்கின்றனர். இதனால் 144 தடை உத்தரவு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16-ம் தேதி இரவு வரை மேலும் நான்கு நாட்களுக்கு தடை உத்தரவை நீடித்து பத்தணந்திட்டை கலெக்டர் நுாகு உத்தரவிட்டுள்ளார்.

தடை உத்தரவை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை வளாகத்தில் சத்தியாகிரகம் நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்தின் வெளியே பா.ஜ., சார்பில் காலவரையற்ற உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை கண்டு கொள்ளாமல் முதல்வர் பினராயி விஜயன் அரசு தடை உத்தரவை நீடித்துள்ளது.

-dinamalar.com

TAGS: