மைசூருவில் விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி

மைசூரு : கர்நாடக மாநிலம் மைசூருவில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலியாயினர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹானூர் தாலுகாவிலுள்ள சுல்வாடி கிச்சுகுட்டி மாரம்மா கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் பலியாயினர். மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டோர் கமகெரே, கொல்லீகல் மற்றும் மைசூருவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்தன.

பிரசாத மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள, ஹானூர் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம்; 2 பேரிடம் விசாரணை:

இந்நிலையில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலை புனரமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாகவும், அதில் ஒரு தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்தததும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

இழப்பீடு:

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ செலவையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

-dinamalar.com

TAGS: