சபரிமலையில் நுழைந்த பெண்கள்: பரிகார பூஜைக்குப் பின் நடை திறப்பு

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் 40 வயது உடைய, பிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடை சாற்றப்பட்டு, பரிகார பூஜைக்கு பின்னர் திறக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலைக்கு செல்ல,அனைத்து வயது பெண்களும் முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு பெண்கள், இன்று (ஜன.,2) அதிகாலை 3.45 மணியளவில் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா எனவும், இரண்டு பேருக்கும் வயது 40 ஆவதும் தெரியவந்துள்ளது. இரண்டு பேரும் எந்தவித முன்னறிவிப்பின்றி, சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். இவர்கள், தேவஸ்தான ஊழியர்கள் சென்று வரும் வழியாக அழைத்துச் செல்லப்ட்டனர். 18 படி வழியாக ஏறவில்லை. பாதுகாப்புக்கு வந்த போலீசார் சிலர் சீருடையிலும், சாதாரண உடையிலும் உடன் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு

இதனையடுத்து மலப்புரத்தில் உள்ள பிந்துவின் வீட்டிற்கும், கோழிக்கோட்டில் உள்ள கனகதுர்கா வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இதற்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

நடை அடைப்பு

பெண்கள் தரிசனம் செய்ததை தொடர்ந்து, கோயிலின் தலைமை தந்திரி ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, சபரிமலை சன்னிதானத்தின் நடை திடீரென அடைக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜைக்கு பின்னர் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

-dinamalar.com

TAGS: