அடேங்கப்பா… 2000 காளைகள்… உலக சாதனை படைக்கும் விராலிமலை ஜல்லிக்கட்டு

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது.

விராலிமலை அம்மன் குளம் பட்டமரத்தான் கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. முதலில் கோவில் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நாட்டிலேயே மிகப்பெரிய ஜல்லிகட்டு போட்டியாகும்.

முதல்வர், துணை முதல்வர் துவங்கி வைத்தனர்

அதிகமான பரிசுப் பொருள்களை வழங்க போகும் போட்டியாக இது திகழப்போகின்றது. இப்போட்டியை தமிழக முதல்வர் பழனிசாமி, தொடங்கி வைக்கின்றனர். முன்னதாக, வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். முதன்முறையாக பொதுமக்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பரிசு மழை

முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு சிப்ட் காரும் , 25 நபர்களுக்கு புல்லட் பைக்கும் வழப்பட உள்ளது. கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் தங்ககாசு, வெள்ளி காசு, எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், கிரைண்டர், ஏசி, மின்விசிறி, ஏர் கூலர் போன்ற எண்ணற்ற எலக்ட்ரானிக் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.

கின்னஸ் சாதனை

இந்த போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக தனி கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டி கின்னஸ் சாதனை செய்யப்படுவதால் மூன்று வெளிநாட்டு நடுவர்களும் பங்கேற்றுள்ளனர்.

2000 காளைகள்

சுமார் 2000 காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. 800 க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்து குவிந்துள்ளனர். திருச்சி சரக டி.ஐ.ஜி. தலைமையில் 4 மாவட்டத்தை சேர்ந்த எஸ்.பி.க்கள், 25 டி.எஸ்.பி.க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-tamil.oneindia.com

TAGS: