இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலின் பெயர் இதுதான்!

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அதிவேக ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.

ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரெயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.

இதேபோல், உத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி நகரில் உள்ள இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் 97 கோடி ரூபாய் செலவில் 16 பெட்டிகளை கொண்ட அதிவிரைவு ரெயிலும் 18 மாதங்களில் தயாரிக்கப்பட்டது.

‘டிரெயின்-18’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெயில் டெல்லி-வாரணாசி நகரங்களுக்கிடையில் செயல்படவுள்ளது. இந்த ரெயிலின் முதல் பயணிகள் சேவையை பிரதமர் மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: