இந்தியா ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்.. 12 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ் மீது மோதச் செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளான்.

மோதலுக்கு உள்ளானது, மொத்தம் 55 இருக்கைகளை கொண்ட ரிசர்வ் போலீஸ் படையின் பஸ் இதுவாகும். இதில் 12 வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும், பலரும் படுகாயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. சமீபகாலத்தில் காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.

தாக்குதலுக்கு உள்ளான பஸ், ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தமும், கிரானைட் வெடிக்கும் சத்தமும் கேட்டதாக அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே, தீவிரவாத தாக்குதலுக்கு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில்,

பள்ளத்தாக்கில் இருந்து மோசமான செய்தி வந்து சேர்ந்துள்ளது. ஐஇடி குண்டு வெடிப்பில், பல சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நான் இந்த தாக்குதலை மிக கடுமையான வழியில் கண்டிக்கிறேன். காயமடைந்தோருக்கும், பலியானோர் குடும்பத்தினருக்கும், நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: