திருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி: திருச்சி அருகே கோவில் திருவிழாவின் போது, ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் பகுதியில் கருப்பசாமி கோவில் அமைந்து உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி சிறப்புடன் கொண்டாடப்படும். இதற்காக திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று கூடுவர். அந்தவகையில், இந்தாண்டும் ஏராளமானோர் குவிந்தனர்.

கோவில் திருவிழாவில் கருப்பசாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதன்பின் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிடிகாசு எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வீசப்படும் சில்லறை காசுகளை எடுத்து வீட்டில் வைத்தால் சிறப்பு என்பதால் கூட்டத்தினர் முண்டியடித்துக்கொண்டு காசுகளை எடுக்க முயற்சித்தனர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். திருவிழாவின் போது, பிடிகாசுகளை எடுப்பதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: