இலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்!

சென்னை: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இலங்கை தாக்குதல் மிக விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் குறி தமிழ்நாடாகத்தான் இருந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கெடுபிடியாக இருந்ததால் இலங்கைக்கு நாச வேலையை மாற்றியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது..

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையான நேற்று ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். பலர் காயமடைந்ததால் அந்த பகுதியே கொஞ்ச நேரத்தில் ரத்தக் களறியானது. இதுவரை 290 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது. உலகையே இந்த சம்பவம் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த விவகாகரம் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்திய விசாரணையில் சில பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

பழி வாங்கும் தாக்குதல்

முன்பு நியூசிலாந்தில் மசூதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இதன் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் யார், என்ன என்பது குறித்தெல்லாம் தேசிய புலனாய்வு பிரிவு படையினர் கண்காணித்து வருகின்றனர்.

கிறிஸ்தவ தேவாலயங்கள்

6 மாசத்துக்கு முன்னாடி ஐஎஸ் ஆதரவாளர் ஒருவர் சிக்கினார். அப்போது, இலங்கையில் தற்போது குண்டுவெடிப்பை நிகழ்த்திய இயக்கம் பற்றி சில விஷயங்களையும் கூறினார். அந்த தீவிரவாத அமைப்பின் நோக்கம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள்தான் என்பதும், வெறும் தேவாலயங்களை குறி வைத்துதான் இந்த தாக்குதல் சதிதிட்டம் நடந்து வருவதாகவும் அந்த இளைஞர் சொல்லி உள்ளார்.

இளைஞர்கள்

முன்னதாக இந்த சதித் திட்டத்தை தமிழகத்தில் நடத்த தீர்மானித்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதற்காக சிலரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அந்த இளைஞர்கள் பின்வாங்கி விட்டனர். இதையடுத்தே சம்பவத்தை இலங்கைக்கு மாற்றியுள்ளனர்.

பயணிகள் வருகை

இலங்கையில் ஈழ இறுதிப் போருக்குப் பின்னர் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளும் கூட தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் கூட அதிகரித்துள்ளது. இதை மனதில் வைத்துத்தான் இலங்கையை குறி வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ரத்தக்களறி

என்ஐஏ விசாரணை அடிப்படையில்தான் இலங்கையை இந்தியாவும் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததால் இன்று மிகப் பெரிய ரத்தக்களறியை அது சந்திக்க நேர்ந்துள்ளது. அதேசமயம், நாம் சுதாரிப்பாக இருந்ததால் பெரும் நாச வேலையிலிருந்து தமிழகம் தப்பியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: