ஆசிய தடகளத்தை மட்டுமல்ல.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற சாதனை படைத்துள்ள கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கத்தார் நாட்டின் தோஹாவில் 2019 -ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளார்.

இந்த ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வாங்கி கொடுத்து பெருமை சேர்த்துள்ள கோமதியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

திமுக

வாழ்த்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘800 மீ ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு கோமதி மாரிமுத்து முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் இவர் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமமுக வாழ்த்து

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று தந்திருக்கும் தமிழக வீராங்கனை கோமதியைப் பாராட்டி மகிழ்கிறேன். 800மீ ஓட்டப்பந்தயத்தில் சாதனைப் புரிந்திருக்கும் கோமதி, திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி மாரிமுத்துவின் மகள் என்பது மனதை நெகிழ வைக்கிறது. இடைவிடாத முயற்சியால் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கும் வீராங்கனை கோமதி இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

மதிமுக வாழ்த்து

இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த கோமதி, இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றது. அவருக்கு, தமிழக அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கொமதேக வாழ்த்து

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில், “கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்றுவரும் 2019 -ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகளில் மகளிர் 800 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை கோமதிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: