பொன் மாணிக்கவேலின் அடுத்த அதிரடி.. 100 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அம்மன் சிலை மீட்பு

மதுரை: மதுரை மேலூரில் 100 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன திரௌபதி அம்மன் சிலை ஒரு வீட்டின் சுவற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது.

மதுரை மேலூரில் 500 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பூசாரியாக நாராயணன் என்பவர் இருந்தார்.

இவருக்கு உதவியாக கந்தசாமி என்பவர் இருந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் கோயிலில் இருந்த பழமையான திரௌபதி அம்மன் சிலை மற்றும் நகைகளை கந்தசாமி எடுத்துவிட்டதாக நாராயணன் குற்றம்சாட்டினார்.

100 ஆண்டுகள்

இதுகுறித்து 1915-ஆம் ஆண்டே காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு விட்டது. 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருட்டு போன சிலை மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

நிர்வாகத்திடம் உண்மை

இந்த நிலையில் கந்தசாமியின் பேரன் தங்களது பழைய வீட்டுச் சுவற்றில் திரௌபதி அம்மன் சிலையை மறைத்து வைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகமும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலிடம் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை அடி உயரம்

அவரது உத்தரவின் பேரில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கந்தசாமியின் பேரன் வீட்டுக்கு சென்று சிலை இருப்பதாக கூறப்பட்ட சுவற்றை இடித்தனர். அப்போது அதில் இரண்டரை அடி உயர திரௌபதி அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது.

சிலையை மீட்ட காவல் துறை

உலோகத்தால் ஆன அந்த சிலை 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். அந்த சுவற்றில் சிலை மட்டுமே இருந்தது. நகைகள் இல்லை. சிலையை மீட்ட காவல் துறையினர் நகைகளை தேடி வருகின்றனர்.

வேறு நபருக்கு சொந்தம்

சிலை கண்டெடுக்கப்பட்ட வீடு கந்தசாமி குடும்பத்தினரிடம் இருந்து இரு வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு தற்போது வேறு நபருக்கு சொந்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: