“பிரகாஷ் ராஜ் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- தயாரிப்பாளர் கே.ராஜன்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான பிரகாஷ்ராஜ், டெல்லியிலுள்ள தமிழக மாணவர்களை அவமதித்துவிட்டதாக அவர் மீது பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் சுயேச்சையாக போட்டியுமிடுகிறார். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக டெல்லியில் பிரச்சாரம் செய்துவருகிறார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய டெல்லி சென்றுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, நான் தமிழன் அல்ல, கன்னடக்காரன் என்றும் தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான் என்று பிரகாஷ் ராஜ் கூறினார். இதனை அடுத்து டெல்லி கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் பிரகாஷ் ராஜின் இந்த பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். பலர் பிரகாஷ் ராஜ் பேசியது திரித்து பேசப்பட்டது என்று அவருக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் கே.ராஜன், “ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய டெல்லி சென்றுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, நான் தமிழன் அல்ல, கன்னடக்காரன் என்றும் தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோவது உண்மைதான் என்றும் கூறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் பிறந்த பிரகாஷ்ராஜை கன்னட திரையுலகம் கைவிட்டபோது, தமிழகத்தில் வாய்ப்பு தேடினார். அப்போது பாலசந்தர் என்ற தமிழர் தான் அவருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பிறகு 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து பொருளும், புகழும் சேர்த்தார். இவரால் பல தமிழ் இளைஞர்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தமிழ் படங்களில் பறிபோனது.

தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஓட்டல், கட்டிட வேலைகள் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். தாய் தமிழகத்திலேயே பல லட்சம் தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லை. உண்மை நிலை இப்படி இருக்க பிரகாஷ்ராஜ் நன்றி மறந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்காக தமிழர்களிடம் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை என்றால் புதிதாக எடுக்கப்படும் தமிழ் படங்களில் பிரகாஷ்ராஜை நடிக்க விடமாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்”என்று தெரிவித்துள்ளார்.

-nakkheeran.in