2 ரயில்கள் மோதவிருந்த பயங்கரம்.. தமிழ் மொழி புரியாமல் சிக்னலை மாத்திப் போட்ட இந்திக்கார அதிகாரி!

மதுரை: மதுரையில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் எதிரெதிரே வந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

மதுரையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு செங்கோட்டை பயணிகள் ரயில் புறப்பட்டது. 5.40 மணிக்கு திருமங்கலம் சென்றடைந்த ரெயில், சிக்னல் கிடைக்காததால் அங்கேயே நிறுத்தப்பட்டது. புறப்பட்ட 10 நிமிடத்துக்குள்ளேயே ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபின் பயணிகள் ரயில் புறப்பட்டது. புறப்பட்டு 200 மீட்டர் தூரம்கூட சென்றிருக்காத நிலையில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு ரெயில் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

ரயில்கள் நிறுத்தம்

ரயில் நிலையம் என்பதால் இரண்டு ரயில்களும் மிகக்குறைந்த வேகத்தில் வந்துகொண்டிருந்தன. இதனால் ரயில் நிலையத்தில் இருந்தவர்களும், பயணிகளும் பீதியடைந்து கூச்சலிட்டனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இரண்டு என்ஜின் டிரைவர்களும் உடனே ரயில்களை நிறுத்தனர்.

பயணிகள் அவதி

அதன்பின்னர் மதுரை -செங்கோட்டை பயணிகள் ரயில் மீண்டும் ரயில் நிலையத்துக்கு வந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கோட்டை- மதுரை ரயில் புறப்பட்டுச் சென்றது. திருமங்கலத்துக்கு 5.40 மணிக்கு வந்த மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் 2 மணி நேரம் தாமதத்துக்கு பின் 7.40-க்கு புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

3 பேர் சஸ்பென்ட்

மதுரை – செங்கோட்டை இருமார்க்க ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்து மோதும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படும் புகாரின் பேரில், மதுரை கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீம்சிங் மீனா, திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயகுமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மொழிப்பிரச்சனை

இந்நிலையில் இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்ததற்கு மொழிப் பிரச்சனையே காரணம் என தெரியவந்துள்ளது. அதாவது மதுரை அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் நேற்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார் மதுரையில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் ரயிலை அந்த தடத்தில் அனுமதித்துள்ளார்.

போனில் தகவல்

அத்துடன் சிக்னல் கோளாறு இருப்பதாகவும் எனவே மதுரை – நெல்லை பயணிகள் ரயிலை தான் அனுப்பி வைத்துள்ளதால் அதே தடத்தில் வேறு ரயிலை அனுப்ப வேண்டாம் என்று கள்ளிக்குடிய நிலைய மாஸ்டர் பீம்சிங் மீனாவிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

தவறாக நினைத்து

ஆனால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் மீனாவிற்கு அதிகாரி ஜெயக்குமார் தமிழில் கூறியது முழுமையாக புரியவில்லை. மேலும் அந்த சமயத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையம் வந்துள்ளது. அந்த ரயிலை அனுப்புமாறு திருமங்கலம் அதிகாரி ஜெயக்குமார் கூறியதாக நினைத்து மதுரை – நெல்லை ரயில் வந்து கொண்டிருந்த தடத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ரயிலை அனுமதித்துள்ளார்.

தமிழ் புரியாததே

பஞ்சாப்பை சேர்ந்த பீம்சிங் மீனாவிற்கு அதிகாரி ஜெயக்குமார் தமிழில் கூறியது புரியாததே இந்த சம்பவத்திற்கு காரணம். இருப்பினும் பீம்சிங் மீனா ரயிலை அனுப்பியதை அறிந்த அதிகாரி ஜெயக்குமார் உடனடியாக திருப்பரங்குன்றம் ரயில் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு இரண்டு ரயில்களையும் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் இரண்டு ரயில்களும் ஒரே தடத்தில் எதிர் எதிரே நிறுத்தப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: