பிரதமருக்கு கடிதம் எழுதிய திரைப்பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்கு!

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்ககளை கட்டுப்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, 49 முக்கிய திரைப்பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுந்தியிருந்தனர். திரைப்பட இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திரா குகா, அபர்ணா சென், சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்டோர் இணைந்து இந்தக் கடிதத்தை எழுதியிருந்தனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூரிலுள்ள காவல் நிலையத்தில் இந்த பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம் நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும், பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டி, வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் பிரிவினைவாத கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடிதம் அமைந்திருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி அளித்த உத்தரவின் பேரில், தற்போது கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த திரைப்பிரபலங்கள் மீது முசாபர்பூரிலுள்ள சதார் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது தேசதுரோகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

-athirvu.in