மாஃபியா

அருண் விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக இருக்கிறார். அவரது குழுவில் பிரியா பவானி சங்கரும், ஒரு இளைஞரும் பணியாற்றுகின்றனர். சென்னையில் முக்கிய இடங்களில் அருண்விஜய் தலைமையிலான குழு திடீர் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையில் கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதை புழக்கத்தை கண்டறிகிறார் அருண் விஜய். அவரது இந்த சோதனையில் போதை மருந்து கடத்தும் சின்ன சின்ன ஆட்கள் மட்டுமே சிக்குகின்றனர். அவரால் பெரும் புள்ளிகளை நெருங்க முடியவில்லை.

இந்த சூழலில், போதை மருந்து தடுப்பு பிரிவில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு சில முக்கிய தகவல்களை தந்த சமூக ஆர்வலர் ஒருவரும் கொல்லப்படுகின்றனர். இதன்பிறகு தேடலை துரிதப்படுத்தும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா? போதை மருந்து புழக்கத்தை ஒழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அருண் விஜய், போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனை நெருங்க முயற்சிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

நாயகி பிரியா பவானி சங்கர், மற்ற நாயகிகள் போல் காதல், ரொமான்ஸ் என்று இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் திறம்பட நடித்து கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக மனதில் பதிகிறார் பிரசன்னா.

இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை மிகவும் ஸ்டைலிஷாக எடுத்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியால் மாஃபியா படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே பூர்த்தி செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

இரண்டாம் பாதியை போல் முதல் பாதியும் வேகமாக இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். கிளைமாக்ஸில் கொடுக்கும் டுவிஸ்ட் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் படம் மிகவும் ஸ்டைலிஷாக வந்துள்ளது.

மொத்தத்தில் ‘மாஃபியா’ வேகம் குறைவு.

maalaimalar