வானம் கொட்டட்டும் – விமர்சனம்

தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை வெட்டியவரை ஆத்திரத்துடன் சென்று வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார் சரத்குமார். அந்த வன்முறை பின்னணியில் வளர்க்க விருப்பமில்லாமல் பிள்ளைகள் இருவரையும் தங்கள் கிராமத்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார் ராதிகா. சென்னையில் வளரும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு புதிய தொழில் தொடங்குகிறார்கள். எல்லாம் நன்றாக செல்லும் வேளையில் பதினாறு வருட சிறை தண்டனை முடிந்து வெளியில் வருகிறார் அப்பா சரத்குமார். இத்தனை வருடங்களாக அவர் இல்லாமல் வாழப் பழகிய அந்தக் குடும்பத்தில் அவரது வரவு என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதும் இன்னொரு புறம் சரத்குமாரை பழிவாங்கக் காத்திருப்பவர் என்ன செய்தார் என்பதே ‘வானம் கொட்டட்டும்’.

படத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு, நடிகர்கள். ஒரு படத்தின் முக்கிய நடிகர்கள் அத்தனை பேரும் இத்தனை சிறப்பாக நடிப்பதை பார்த்து சில காலம் ஆகிறது. முதல் காட்சியிலேயே, சரத்குமார் நம் மனதில் கம்பீரமாகப் பதிகிறார். இவரை ஏன் நாம் அடிக்கடி திரையில் பார்க்க முடியவில்லை என்ற கேள்வி ஏற்படுகிறது. ராதிகா, அதிர்ச்சியையும் அழுத்தத்தையும் அன்பையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். நடிப்பில் அத்தனை பரிமாணங்கள்! ஓவர் ஆக்ஷன் என்பது சிறிதுமின்றி மிக இயல்பாக அழுத்தமான நடிப்பை தந்து கவர்கிறார். விக்ரம் பிரபுவுக்கு வெகுநாள் இடைவெளிக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம், நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், எப்போதும் போல இயல்பான நடிப்பு. பாலாஜி சக்திவேல், ஒரு ஆச்சரியம். நடிகராக அசுரனின் அறிமுகமாகி இருந்தாலும் இதில் கிராமத்து பெரியப்பா பாத்திரத்தில் செம்மையாக நடித்து சிரிக்கவைக்கிறார், ரசிக்கவைக்கிறார், நெகிழ வைக்கிறார். ஷாந்தனு, மடோனா, அமிதாஷ் ஆகியோருக்கு பாத்திரங்கள் சிறிது என்றாலும் நடிப்பில் எந்தக் குறையுமில்லை.

குழந்தைகளுடன் சென்னை வரும் ராதிகா, வாழும் இடம், வாழ்க்கை, அவரது தொழில் என அந்தக் களம் இயல்பாக ஈர்க்கிறது. விக்ரம் பிரபு செய்யும் தொழிலும் நாம் அதிகம் பார்த்திராதது, விரிவாக, சுவாரசியமாக காட்டப்பட்டிருக்கிறது.
nakkheeran