அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 60 ஆயிரம் படுக்கைகள் தயார்- மத்திய அரசு ஏற்பாடு

நாடு முழுவதும் கொரோனாவில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் 60 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள்

புதுடெல்லி: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியும் தொடர்ந்து கண்காணித்தும் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும், மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.

அதில், கொரோனாவை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை விரைவாக செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதிகள் செய்யவும், தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவுக்கு வென்டிலேட்டர்கள் வைக்கவும், ஆக்ஸிஜன், முக கவசங்கள் தயாராக வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தாக்குதலில் இந்தியா தற்போது 2-வது நிலையில் உள்ளது. 3-வது நிலையான சமூக பரவல் நிலைக்கு செல்லாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் கொரோனாவில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க 60 ஆயிரம் படுக்கைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் வென்டிலேட்டர் எண்ணிக்கையை 2½ மடங்கு அதிகமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

maalaimalar