கொரோனா பரவாமல் தடுக்க கிராமத்தை காவல் காக்கும் இளம்பெண்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தனது கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக எல்லையில் இளம்பெண் ஒருவர் காவல் காக்கிறார்.

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ்(23). பட்டதாரியான இவர் கிராமத்தலைவராக பணியாற்றி வருகிறார். தங்கள் கிராமத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்று ஊரைக் காக்கும் எல்லைச் சாமியாய் நின்று கொண்டிருக்கிறார். கையில் தடியுடன் ஊரின் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு, தேவையின்றி யாரும் உள்ளே வராமலும், வெளியே செல்லாமலும் பார்த்துக் கொள்கிறார்.

இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி அகிலா கூறியதாவது:-

தொடக்கத்தில் லாக் டவுன் உத்தரவை பொதுமக்கள் யாரும் தீவிரமாக கடைபிடிக்கவில்லை. சிலர் தேவையின்றி கிராமத்தில் இருந்து வெளியே செல்வதை காண முடிந்தது. எனவே நான் கிராமத்தின் எல்லையில் அமர்ந்து கொண்டேன். அங்கே தடுப்புகள் அமைத்து காவல் காக்க தொடங்கினேன்.

உள்ளே வருபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்களிடம் என்ன காரணம்? எதற்காக செல்கிறீர்கள்? என்று கேள்வி கேட்பேன். அது தேவையான ஒன்றாக இருந்தால் மட்டுமே அனுமதி அளிப்பேன். இல்லையெனில் அப்படியே திரும்பி போக அறிவுறுத்துகிறேன். நம்மை காத்துக் கொள்ள இதுதான் சரியான சமயம். நமது சொந்தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

எனது கிராமத்தை காக்க என்னால் முடிந்த சிறிய வி‌ஷயத்தை செய்கிறேன். யாராவது ஒருவருக்கு வந்து விட்டால் கூட ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதித்துவிடும். எங்கள் கிராமத்திற்குள் புதிய வாகனமோ அல்லது புதிய முகங்களோ வருவது தென்பட்டால் அவர்களிடம் தீவிரமாக விசாரிப்பேன்.

குறிப்பாக நகரத்தில் இருந்து வருபவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறேன். பொதுமக்கள் வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கிராமத்தில் 1,600 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு சுமார் 2,000 முகக் கவசங்கள் விநியோகம் செய்துள்ளோம் என்றார்.

maalaimalar