இந்திய – சீன எல்லை பேச்சுவார்த்தை: பின்வாங்கும் இருநாட்டு ராணுவங்கள்

இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நிலைகளில் இருந்தும் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் பின் வாங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமைசெய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – சீன எல்லையில் பேச்சுவார்த்தை

இரு நாட்டு ராணுவத்தினரும் பேட்ரோலிங் பாய்ண்ட் 14 (கால்வன்), பேட்ரோலிங் பாய்ண்ட் 15, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட லடாக்கின் பல்வேறு பகுதிகளில் பேச்சுவார்த்தையைத் தொடர உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.

இன்னும் சில நாட்களில் இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது.

ஜூன் ஆறாம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கால்வன் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா தங்கள் நாட்டு ராணுவத்தினரை தங்கள் எல்லைக்குள் அழைத்துக் கொண்டதை தொடர்ந்து இந்திய ராணுவமும் தங்கள் ராணுவத்தினரில் சிலரையும், சில ராணுவ வாகனங்களையும் அந்தப் பகுதிகளிலிருந்து இந்திய எல்லைக்கு உள்ளே அழைத்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் படைப்பிரிவுகளின் கமாண்டர் மட்டத்தில் நடைபெறுவதாகவும் அவர்கள் ஹாட்லைன் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ள செய்தி கூறுகிறது.

சீன ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவத்தின் குழுக்கள் ஏற்கனவே சுஷூல் பகுதியில் உள்ளனர்.
பேச்சுவார்த்தை தொடர்பாக ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இந்தியா – சீனா எல்லை பதற்றம் தொடங்கியது எப்படி?

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

அக்சாய் சீனாவின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது.

ஆனால் சீனாவோ, கால்வன் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டியது.

லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தனக்கு சொந்தமான இடம் என்று கருதும் எல்லைப்பகுதிகளில் சீனப் படைகள் கூடாரம் அமைத்து, சுரங்கங்கள் தோண்டி அதன் வழியாக கனரக உபகரணங்களை கொண்டு வந்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

BBC TAMIL