மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர்

9-ம் வகுப்பு படிக்கும் மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர்.

கோதாவரி, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 20 நாட்களாக ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டை தனது தாயாரின் செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார்.

இந்த மாணவனின் தந்தை குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம்பணம் அனுப்பி வைக்கிறார். இந்நிலையில், அந்த மாணவர் செல்போனில் மும்முரமாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டை விளையாடி வந்தநிலையில், இதில், கூடுதலாக ஆயுதம் வாங்க ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை செலவாகும் என்றும், இதற்கு வங்கிக் கணக்கின் விவரங்களை அப்லோட் செய்யுங்கள் எனவும் குறுந்தகவல் வந்துள்ளது. இதன்படி, தனது தாயின் வங்கிக் கணக்கின் விவரங்களையும், ஏடிஎம் கார்டு விவரங்களையும் அளித்துள்ளார். சிறிது நேரத்தில் மெல்ல, மெல்ல ரூ.5.40 லட்சம் ரூபாயும் அவரின் தாயாரின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது.

இதனை அறியாத அவரின் தாயார் நேற்று தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஏடிஎமிற்கு சென்றுள்ளார். அதில் பணம் இல்லை என தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்தார். கடந்த 3 நாட்களில் பணம் முழுவதும் சிறிது, சிறிதாக எடுத்து விட்டதாக வங்கியின் மேலாளர் தெரிவித்தார். அதன் பின்னர், அவர் அமலாபுரம் போலீஸ் நிலையத்தில் தனது மகனுடன் சென்று நேற்று புகார் அளித்தார். போலீஸாரும் சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

dinamalar