இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது- 6.35 லட்சம் பேர் குணமடைந்தனர்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதியவர்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 687 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 10,03,832 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 687 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602 ஆக உயர்ந்துள்ளது. உயரிழப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது.

இதுவரை 6,35,757 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 63.3 சதவீதமாக உள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,42,473 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 284281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 158140 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 11194 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 156369 பேருக்கும், டெல்லியில் 118645 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

malaimalar