இந்தியாவில் 14 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு- 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு தொற்று

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 708 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 14,35,453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 708 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 9,17,568 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,85,114 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 375799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 213238 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13656 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் 213723 பேருக்கும், டெல்லியில் 130606 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

malaimalar