தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையில் வீடுகளை இழந்தோருக்கு அரசு நிதியுதவி அறிவித்து உள்ளது.
ஐதராபாத், தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்வது வழக்கம். எனினும், தெலுங்கானாவில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட 24 மணிநேரத்தில் பெய்த கனமழையானது (72.5 மி.மீ.), கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபரில் பெய்த 3வது அதிக மழை பொழிவாகும்.
இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி கே. சந்திரசேகர ராவ் இன்று கூறும்பொழுது, தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட, தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இதேபோன்று மழையால் முழுவதும் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக கூடும் என கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய சாத்தியம் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
malaimalar

























