உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன.

தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, இன்று 10-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 58 பேர்களின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேறு முழுவதுமாக மூடியிருப்பதால் மீட்பு பணிகள் கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. சேறுகளை அகற்றும் பணியும், துளையிடும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. மீப்பு பணியில் ராணுவம், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த 450-க்கு மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

dailythanthi