பாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’ ஆசாமியாக எஸ்.ஜே.சூர்யா – நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

பாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’ ஆசாமியாக எஸ்.ஜே.சூர்யா – நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

நடிகர்: எஸ்.ஜே.சூர்யா நடிகை: ரெஜினா மற்றும் நந்திதா டைரக்ஷன்: செல்வராகவன் இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு : அரவிந்த கிருஷ்ணாசெல்வராகவன் இயக்கத்தில் முதல் பேய் படம். மிக நீண்ட கால எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஒருவழியாக திரைக்கு வந்து இருக்கிறது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் விமர்சனம்.

ரெஜினா கசன்ட்ரா, ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர். அந்த இல்லத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு அவர் உதவ நினைக்கிறார். இதற்காக ஒரு காட்டு பங்களாவில் உள்ள கோடீஸ்வரரின் குழந்தையை கவனிக்கும் வேலைக்கு போகிறார்.

கோடீஸ்வரர், எஸ்.ஜே.சூர்யா. அவருடைய மனைவி, நந்திதா ஸ்வேதா. இவர்களின் குழந்தை ஐந்து வயது சிறுவன். இவனை கவனிக்கும் வேலைக்கு மாதம் ரூ.65 ஆயிரம் சம்பளம். ஆதரவற்றோரின் நலனுக்காக அந்த பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு காட்டு பங்களாவுக்கு செல்கிறார்.

அவர் மீது எஸ்.ஜே.சூர்யா ஆசைப்பட்டு அவ்வப்போது சில்மிசம் செய்கிறார். ரெஜினா உடன்பட மறுக்கிறார். எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டு மனைவி நந்திதாவை ஊருக்கு அனுப்பிவிட்டு, ரெஜினாவை பலவந்தமாக அடைகிறார். பங்களாவின் வேலைக்காரர்களும் அவருடன் சேர்ந்து ரெஜினாவை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ரெஜினா இறந்து போகிறார். அவருடைய ஆவி எப்படி பழிவாங்குகிறது? என்பது மீதி கதை.

பாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’ ஆசாமியாக எஸ்.ஜே.சூர்யா. பணத்துக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு நந்திதாவை திருமணம் செய்து கொண்டவராக-ரெஜினா மீது காமவெறி கொண்டவராக எதிர்மறை கதாபாத்திரத்தில், மிரட்டியிருக்கிறார்.

துணிச்சல் மிகுந்த பெண்ணாக வரும் ரெஜினா காமவெறியர்களிடம் சிக்கி பலியாவதை நம்ப முடியவில்லை. அவருக்கு எஸ்.ஜே.சூர்யா பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சிகளில், பதற வைக்கிறார். ஆவியாகி விட்டதை எண்ணி கலங்கும் சீன்களில், அய்யோ பாவமாக பரிதாபப்பட வைக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நந்திதா, பணக்கார மகள் மற்றும் மனைவி வேடத்தில், கச்சிதம்.

இரவு நேர சம்பவங்கள், இடி-மின்னல், கொட்டும் மழை ஆகியவற்றை படமாக்கியிருக்கும் விதத்தில், அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா திகில் கூட்டியிருக்கிறது. இவருடன் யுவன் சங்கர் ராஜா கைகோர்த்துக்கொண்டு பல காட்சிகளில் பயமுறுத்தி இருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பாக கதை சொன்ன டைரக்டர் செல்வராகவன், இரண்டாம் பாதியில் பின்தங்கியிருக்கிறார். காட்டு பங்களாவுக்குள் ரெஜினா காலடி எடுத்து வைத்ததுமே அவரை மின்னல் போல் ஏதோ ஒரு சக்தி எச்சரிப்பது, ரெஜினா புதைகுழியில் இருந்து எழுந்து வருவது, எஸ்.ஜே.சூர்யாவை தாக்க முயன்று முடியாமல் போய் இயலாமையை நினைத்து கலங்குவது, நீச்சல் குளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றுவது ஆகிய காட்சிகள் செல்வராகவனின் முத்திரைகள்.

dailythanthi