10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 86 வயதான முன்னாள் முதல் மந்திரி

கல்விக்கு வயது ஒரு தடை அல்ல. இதை நிரூபித்து இருப்பவர், ஒரு சாமானியர் அல்ல. அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓ.பி.சவுதாலா.

10-ம் வகுப்பு தேர்வு

இவர் 86 வயதான நிலையில், சிர்சாவில் ஆர்ய கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த 10-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வினை எழுதினார்.

இது பற்றி அவர் கூறியதாவது:-

டெல்லி திகார் சிறையில் இருந்தபோது 2 வருடங்களுக்கு முன் நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினேன். அப்போது ஆங்கில பாட தேர்வு நான் எழுதவில்லை. இந்த நிலையில் தற்போது அந்த தேர்வை நான் எழுதி உள்ளேன். நான் இளம் வயதில் நிறைய படிக்க முடியவில்லை. ஆங்கில வார்த்தைகளை கவனமுடன் கவனிப்பேன். அவற்றை எழுதியும் வைப்பேன். அது இப்போது எனக்கு உதவி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உதவிய மாணவி

சவுதாலா இந்த தேர்வு எழுத உதவியாக இருந்தவர், சிர்வா பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி மல்கியாத் கவுர் ஆவார்.சவுதாலா தேர்வு எழுதியது பற்றி இவர் குறிப்பிடுகையில், “அவர் தேர்வுக்கு நன்றாக தயாராகி இருந்தார். அவரது ஆங்கில உச்சரிப்பு மிக நன்றாக இருக்கும். இந்த பாடத்தில் அவர் நல்ல மதிப்பெண்களை பெறுவார்” என கூறினார்.

(நன்றி Dailythanthi)