சென்னை, கோவை உட்பட 35 நகரங்களில் 8 ஆயிரம் பேருக்கு வேலை: அமேசான்!

2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம்  இலக்கு வைத்துள்ள நிலையில், ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் நடப்பு ஆண்டில் இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு  பல்வேறு துறைகளில் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக  அறிவித்துள்ளது.

உலக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனம் திகழ்ந்து வருகிறது.  ஆன்லைன் வர்த்தகம் மட்டுமின்றி, ஓடிடி,  செயற்கை நுண்ணறிவு  உட்பட பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது. இந்தியாவிலும் அமேசான் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் தங்களது வர்த்தகத்தை வளர்ச்சி பெற வைக்கும் முயற்சியில் அமேசான் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்தியாவில்  நடப்பு ஆண்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணிக்கு எடுக்கவுள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் மனிதவள துறைத் தலைவர் தீப்தி வர்மா பிடிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் 35 நகரங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, குர்கான், மும்பை, கொல்கத்தா, நொய்டா, அமிர்தசரஸ், அகமதாபாத், போபால், கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், லூதியானா, புனே, சூரத் போன்ற நகரங்கள் உட்பட நாட்டின் 35 நகரங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்பை இந்த ஆண்டு வழங்க உள்ளோம். கார்ப்ரேட், தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை மற்றும் செயற்பாடு போன்ற பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இயந்திர அடிப்படையிலான அறிவியல் பிரிவுகளிலும் வேலைக்கு ஆட்களைச் சேர்க்க இருப்பதாக தெரிவித்த தீப்தி வர்மா,  குறிப்பாக மனிதவளம், நிதி, சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் ஆட்களை நியமிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

நேர்முகமாகவும் மறைமுகமாகவும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம்  இலக்கு வைத்துள்ள நிலையில், ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,”பெருந்தொற்றுக் காலத்தில்கூட அமேசான் நிறுவனம் 3 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யும் பணி முழுவதும் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

இந்தியாவில் அமேசான் வளர்ந்து வருவதால் அளவில் வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம்.  16ம் தேதி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களுக்கு வழிகாட்டும் முகாம் நடத்த உள்ளோம். காணொலி மூலம் நடக்கும் இந்த முகாமில், அமேசான் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் அனுபவங்கள், பணிச் சூழல், நிறுவனத்தின் சூழல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

திறமையான முறையில் வேலை தேடுவது எப்படி, பயோ டேட்டா வடிவமைப்பது எப்படி, நேர்காணலில் எவ்வாறு பங்கேற்பது, எவ்வாறு பதில் அளிப்பது போன்றவை தொடர்பாக இந்த முகாமில் பங்கேற்பவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

(நன்றி TAMIL NEWS 18)