300 நாட்களை கடந்த டெல்லி விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்தநிலையில் விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்டுள்ள போராட்டம் நேற்றுடன் 300 நாள்களை நிறைவு செய்துள்ளது.

இதுபற்றி சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியாக நடத்தி வரும் அறப்போர் 300 நாள்களைக் கடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கை தெளிவாகத் தெரிந்தாலும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளது.  விவசாயிகள் நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சக்தியாக இருந்தாலும், தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளால் பாஜக வென்றது என்பதை மறந்துவிட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டமானது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் விருப்பத்திற்கும், தீர்கத்திற்கும் நம்பிக்கைக்கும் ஒரு சான்றாக மாறியிருக்கிறது. என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா குறிப்பிட்டுள்ளது.

மேலும், வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

தொழிலாளர் சங்கங்கள், வர்தக சங்கங்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சைக்கிள் மற்றும் வாகன பேரணிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி Dailythanthi)