துணை ராணுவத்தினர் வாரிசுக்கு உதவித் தொகை அதிகரிப்பு

புதுடில்லி : வன்முறை மற்றும் கலவரங்களின் தடுப்பு நடவடிக்கையின் போது உயிரிழக்கும் துணை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான உதவித் தொகை 35 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

துணை ராணுவப் பிரிவில், ஆயுதப் படை போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.இப்பிரிவினர் வன்முறை தடுப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் தொகை பாரபட்சமாக உள்ளதாக, உயிரிழந்த துணை ராணுவத்தினரின் வாரிசுகள் புகார் தெரிவித்தனர்.உதாரணமாக, மத்திய ரிசர்வ் போலீசார் வன்முறை தடுப்பு நடவடிக்கையின்போது இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு 25 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், விமான நிலையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு படையினர் வாரிசுகளுக்கு 15 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகைய பாரபட்சத்தை நீக்கி, தாக்குதலில் உயிர் தியாகம் செய்யும் துணை ராணுவப் பிரிவினரின் வாரிசுகளுக்கான உதவித் தொகையை 35 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இது தவிர்த்து, குழந்தைகள் கல்வி, மகள் திருமணம் உள்ளிட்டவற்றுக்கான நிதியுதவியும், இறந்த துணை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது. ரயில், விமான சேவை கட்டணங்களிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

dinamalar