அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி பேச்சு

பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டு காணொலி மூலம் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், கானா அதிபர்  நானா அட்டோ டன்க்வா அகுஃபோ அட்டோ, ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி நாரினா ரஜோலினா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் சார்ந்த  உயர்தரமான, நம்பகத்தன்மையான, நிலையான சேவைகளை, நடுநிலை வழியில் வழங்குவதும்தான் உள்கட்டமைப்பு மேம்பாடு.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம்.

எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்கவேண்டும். அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம்.

உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிர்கால தலைமுறையினருக்கும் பேரிடர்களை தடுக்க முடியும். உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பல தலைமுறைகளையும் பாதிக்கும்.

கல்வி, சுகாதாரம், குடிநீர், துப்புரவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமான துறைகளில் அடிப்படை சேவை வசதிகளை இந்தியா அதிகரித்து வருவதால், பருவநிலை மாற்றத்தையும் மிக நேரடியான வழியில் நாங்கள் எதிர்கொள்கிறோம்.

இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Malaimalar