இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி- 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: தொடரை கைப்பற்றியது

இந்திய வீரர் ரிஷப் பண்ட் 125 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ராய் 41 ரன்களும் அடித்தார்.

பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். பென் ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் குவித்தார்.

மொயின் அலி (34 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (27 ரன்கள்), டேவிட் வில்லி (18 ரன்கள்), அடித்தனர். கிரேக் ஓவர்டன் 32 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 260 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான ரோகித்சர்மா 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் ஒரு ரன்னுடன் வெளியேற, கோலி 17 ரன் அடித்தார். சூரியகுமார் யாதவ் 16 ரன்னுக்கு அவுட்டானார்.

எனினும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டதுடன், இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியது. பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பண்ட், சதம் அடித்தார். 42 வது ஓவரில் பண்ட் 21 ரன்களை குவித்தார். இந்திய அணி 42.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்த பண்ட் கடைசிவரை களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 7 ரன் அடித்து களத்தில் நின்றார்.

இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

-mm