குடியரசுத் தலைவர் தேர்தலில் 99.18% வாக்கு பதிவு- 21-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர், ஓ.பி.எஸ், கவச உடையுடன் வந்து வாக்களிப்பு திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர்பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் வாக்களித்தனர். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றிருந்தனர்.

தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கு பதிவு செய்தார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் வாக்குகளை பதிவு செய்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க மாலை 4 முதல் 5 மணி வரை நேரம் அளிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வாக்களித்தனர் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர். மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வருகிற 25-ந்தேதி அவர் பதவி ஏற்பார்.

 

-mm