திடீரென ஒலித்த அலாரம்… மாலி நோக்கி சென்ற விமானம் கோவையில் தரையிறக்கம்

விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார். விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.

பெங்களூருவில் இருந்து மாலி நாட்டுக்கு 92 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் விமானத்தில் இருந்து திடீரென அலாரம் ஒலித்தது.

விமானத்தில் இருந்து புகை வந்ததற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, விமானம் கோயம்புத்தூர் விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டது. கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்ததும் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அப்போது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலையில் இருப்பதாக பைலட் தெரிவித்தார். எனினும், பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது, விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எச்சரிக்கை அலாரம் பழுதடைந்ததால் அலாரம் ஒலித்ததும் தெரியவந்தது. அத்துடன் விமானத்தை தொடர்ந்து இயக்கலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

-mm