காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி

காமன்வெல்த் போட்டியில் இந்தியா 61 பதக்கங்கள் வென்றது. குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் சரின் பிரதமரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்துச் சென்றனர்.

இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று விருந்தளிக்க உள்ளார்.

பிரதமர் மோடி காலை 11:00 மணிக்கு பதக்கம் வென்ற வீரர்களைச் சந்திக்கிறார். காமன்வெல்த் குத்துச்சண்டையில் பதக்கம் வென்றவுடன் பேட்டியளித்த இந்திய வீராங்கனை நிகாத் சரின், பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனது குத்துச்சண்டை கையுறையில் பிரதமரிடம் ஆட்டோகிராப் வாங்குவேன் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

-mm