திருச்சி, கோவையில் இருந்து விமான சேவைக்கு துபாய் தீவிரம்- மத்திய அரசுக்கு கடிதம்

துபாயில் இருந்து இப்போது இந்தியாவுக்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது. விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும்.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு வேலை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல் சுற்றுலா செல்வதற்கும் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அபுதாபி, கத்தார், ஏமன், சார்ஜா ஆகிய பகுதிளில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதையடுத்து துபாய் நாட்டில் இருந்து அதிக விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

துபாயில் இருந்து தற்போது இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 9 நகரங்களுக்கு விமான சேவை இருந்து வருகிறது.

இந்த நிலையில் அமிர்தசரஸ், திருச்சி, கோவை , கண்ணூர், கோவா, புவனேசுவர், கவுகாத்தி, புனே ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் முகமது அலி இந்திய விமானத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- துபாயில் இருந்து இப்போது இந்தியாவுக்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது. 2014-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி தற்போது 65,200 விமான இருக்கைகள் உள்ளன.

கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா-துபாய் இடையே விமான சேவை நல்ல வளர்ச்சியை பெற்று உள்ளது. சரக்கு விமான போக்குவரத்து மூலம் 2 நாடுகளுக்கும் நல்ல லாபமும் கிடைத்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு மேலும் விமான சேவை தொடங்க துபாய் ஆர்வமாக உள்ளது.

வாரம்தோறும் 50 ஆயிரம் விமான இருக்கைகளை அதிகரிக்கவும் உள்ளோம். விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும்.

இரு நாட்டு விமான போக்குவரத்து ஆணைய பிரதிநிதிகள் சந்தித்து பேசுவது தொடர்பாக முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

 

-mm