பெரும்பாலான விபத்து மரணங்களுக்கு அதிக வேகமே காரணம்: மத்திய அரசு அறிக்கை

காரில் பின் இருக்கையில் அமர்பவர்கள் ‘சீட் பெல்ட்’ அணியாவிட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கலாம். ஹெல்மெட் அணியாததால், 30.1 சதவீத மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், ‘2020-ம் ஆண்டில் சாலை விபத்துகள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2020-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், அதிவேகம் காரணமாக அதிக விபத்துகள் நடந்துள்ளன.

அதாவது, 2 லட்சத்து 65 ஆயிரத்து 343 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 91 ஆயிரத்து 239 பேர் இறந்துள்ளனர். இது மொத்த விபத்து உயிரிழப்புகளில் 69.3 சதவீதம் ஆகும். அடுத்தபடியாக, தவறான திசையில் வாகனம் ஓட்டியதால், 20 ஆயிரத்து 228 விபத்துகள் ஏற்பட்டு, 7 ஆயிரத்து 332 மரணங்கள் நடந்துள்ளன. ‘சீட் பெல்ட்’ அணியாததால், 15 ஆயிரத்து 146 பேர் இறந்துள்ளனர், 39 ஆயிரத்து 102 பேர் காயமடைந்துள்ளனர்.

மது போதையில் வாகனம் ஓட்டியதால், 8 ஆயிரத்து 355 விபத்துகள் ஏற்பட்டு, 3 ஆயிரத்து 322 மரணங்கள் நடந்துள்ளன. மொபைல் போன் பயன்படுத்தியதால் 6 ஆயிரத்து 753 விபத்துகள் ஏற்பட்டு, 2 ஆயிரத்து 917 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஹெல்மெட் அணியாததால், 30.1 சதவீத மரணங்களும், 26 சதவீத காயங்களும் ஏற்பட்டு உள்ளன.

காரில் பின் இருக்கையில் அமர்பவர்கள் ‘சீட் பெல்ட்’ அணியாவிட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கலாம். ஆனால், இது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. போக்குவரத்து அதிகாரிகளும் மிகவும் அரிதாகவே அத்தகையோருக்கு அபராதம் விதிக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

-mm