கொரோனா குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: சீரம் தடுப்பூசி நிறுவனர்

வழிகாட்டு நெறிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராஜிவ் பல், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தொற்றுநோய்களுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.எல். அரோரா, உயிரிதொழில்நுட்ப துறை செயலாளர் ராஜேஷ் கோகலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநரான அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனினும் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், நாம் சிறப்பான முறையில் தடுப்பூசி பாதுகாப்பை பெற்றிருக்கிறோம். அதேநேரத்தில், மத்திய அரசும் சுகாதாரத் துறையும் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.