122 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிமூட்டம்: டெல்லியில் வரலாறு காணாத வகையில் மக்களை நடுங்க வைக்கும் குளிர்

பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றம், இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக வடமாநிலங்களிலும், மத்திய மாநிலங்களிலும் கடந்த மாதம் முதல் கடுமையான குளிர் நிலவுகிறது.

அதிலும் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு குளிரின் தாக்குதல் அதிகரித்து கொண்டே வந்தது. கடந்த 2 தினங்களாக தலைநகர் டெல்லியில் தாங்க முடியாத அளவுக்கு பனி மூட்டமும், குளிரும் காணப்பட்டது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சராசரி அதிகபட்ச தட்ப வெப்பநிலை 27.32 டிகிரி செல்சியசாக இருக்கும். 1901-ம் ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு டெல்லியில் குளிர் நிலவியது. 122 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தாங்க முடியாத குளிர் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நைனிடால், தர்மசாலா, டேராடூன் போன்ற நகரங்களில்தான் பனிப்பொழிவும், குளிர் காற்றும் தாங்க முடியாதபடி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த நகரங்களை விட டெல்லியில் கடுமையான குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த ஒரு வாரமாக டெல்லி மற்றும் வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் மக்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாதபடி முடங்கி உள்ளனர். கடுமையான குளிர் காரணமாக தீ மூட்டம் போட்டு சுற்றி அமர்ந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) வடமாநிலங்களில் மிக மிக கடுமையான குளிர் காற்று வீசியது.

அருணாச்சலப் பிரதேசத்தில் 11 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் மக்கள் பனியோடு உறைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். டெல்லியில் இன்று காலை 3 டிகிரி செல்சியசாக தட்ப வெப்பநிலை இருந்தது. இதனால் டெல்லி மக்கள் கடுமையான அவதிக்குள்ளானார்கள். வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து ரெயில்களும் இன்று தாமதமாக சென்றன. அதிகாலையில் வெளியில் வந்தவர்கள் 50 மீட்டர் தொலைவுக்குள் உள்ளவர்களைகூட பார்க்க முடியாத பனிபுகை மூட்டத்துக்குள் சிக்கி தவித்தனர்.

பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. இந்த மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் காற்று வீசும் என்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை வரை மிக கடுமையான குளிர் இருக்கும் என்று வானிலை இலாகா ரெட் அலர்ட் விடுத்துள்ளது. டெல்லிக்கு வந்து சேர வேண்டிய 2 ரெயில்கள் இன்று தாமதமாக சென்று சேர்ந்தன.

 

-mm