மணிப்பூர் பற்றி எரிய பாஜக அரசியலே காரணம்

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல், நேற்று (புதன்கிழமை) திடீரென அதிகரித்தது.

பழங்குடி ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றதை அடுத்தே, மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. மோதல் காரணமாக இதுவரை 9 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். காவல் துறையோடு, ராணுவமும் அஸ்ஸாம் ரைபில்ஸ் படைப்பிரிவும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அந்த செய்தித் தொடர்பாளர், நிலைமை உண்ணிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இதனிடையே, இந்த மோதலுக்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூர் பற்றி எரிகிறது. அழகான அந்த மாநிலத்தில் சமூகங்களுக்கு இடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி, அமைதியை அழித்துவிட்டது.

பாஜகவின் வெறுப்பூட்டும் பேச்சு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் செயல்பாடு, அதிகாரத்தின் மீது அதற்கு இருக்கும் பேராசை ஆகியவையே இதற்குக் காரணம். அமைதியை கடைப்பிடிக்குமாறு மக்களை காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாநிலம் திரும்பவும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

-th